EXCLUSIVE: ஜெயமாலாவுக்கு ரஜினி கடிதம்!

கர்நாடகாவில் குசேலன் வெளியாக ரஜினி எழுதிய கடிதம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதியுள்ள ஒரு கடிதம்தான் கர்நாடகாவில் குசேலன் திரைப்படம் தடையின்றி வெளியாகக் காரணமாக இருந்தது என கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் துணைத்தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

இன்று பிற்பகல் பெங்களூரிலுள்ள பிலிம்சேம்பர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், பிரச்சினையைத் தீர்த்து வைத்த ரஜினியின் கடித்தத்தை நிருபர்களுக்குக் காட்டினர்.

அதில் எந்த இடத்திலும் ரஜினி மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. பொதுமக்களின் நன்மை கருதியே தான் அவ்வாறு பேசியதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.   

கன்னட திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கன்னடத்தில் எழுதியுள்ள அந்தக் கடிதம்:

ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்கமாட்டீரக்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும்கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

நேற்று இந்தக் கடிதம் வந்த அடுத்த சில நிமிடங்களில் குசேலனை கர்நாடகா முழுவதும் வெளியிட எந்தத் தடையுமில்லை என ஜெயமாலா அறிவித்த்து நினைவிருக்கலாம்.  

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களைகட்டியுள்ளது.

தமிழ் திரையுலகினரின் மௌனம்:

குசேலனுக்கு கர்நாடகாவில் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழ்த் திரையுலகமும், தென்னிந்திய பிலிம்சேம்பரும் மௌனம் சாதித்து வந்ததைப் பார்த்த பிறகே ரஜினிகாந்த் இந்தக் கடிதத்தை எழுதியதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் படங்களுக்கு ஒவ்வொரு முறை கர்நாடகத்தில் பிரச்சினை ஏற்படும்போதும், தமிழ் திரையுலகம் அமைதி காத்து விடுகிறது.

முன்பு பாபா படத்துக்கு பாமகவால் பிரச்சினை ஏற்பட்ட போதும் திரையுலகம் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குசேலன் பிரச்சினையில் கர்நாடகத்தில் சுமுகமான நிலை ஏற்பட விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் ஜெயமாலா ஆகியோர்தான் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட முயற்சி காரணமாகவே கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் வாட்டாள் நாகராஜ் இப்போது அடக்கி வாசித்து வருவதாக கர்நாடக பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடுக